நாளை கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர்

 
Assembly

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை (ஜன. 6) தொடங்குகிறது.

assembly

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும்.  அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். ஒரு கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததால், சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30  மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து நா:அஒ காலை 9 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.20 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ரவியை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் செல்கிறார்.  பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசித்து முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசிக்கிறார்.

பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். வரும் 7-ம் தேதி சட்டப்பேரவை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கூட்டத்தை தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்  மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.