புதுச்சேரியை விட்டு வெளியேறுக.. ஆளுநர் தமிழிசைக்கு எதிராக போராடியவர்கள் கைது..

புதுச்சேரியில் இருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் ராஜ்நிவாஸை முற்றுகையிட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாகவும், ஆளுநர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமே பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். ஆளுநரின் இந்தக் கருத்தைக் கண்டித்தும், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர் தமிழிசை புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸை முற்றுகையிட முயன்றனர்.
முன்னதான ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக வந்த அவர்களை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கேயே கோரிக்கைளை முன்வைத்து போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர். ஒரு பெண் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.