“கண்டிஷனை ஒத்துக்கொள்ளாமல் நிதி மட்டும் கேட்டால் எப்படி?”- எல்.முருகன்

தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது, மக்களை அரசியலுக்காக தவறான திசையில் திருப்புகிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், “தொலைநோக்கு பார்வையுடன் 2047-க்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் 11லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள், தமிழ் மொழியின் மீது பிரதமர் நரேந்திர மோதி கொண்டுள்ள பற்றின் காரணமாக 3வது ஆண்டாக காசி தமிழ்ச் சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக்கொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்லி உள்ளார். பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கிவிட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனை படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை நான், என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளை தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.” என பேசினார்.