என் அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடம் பணம் வாங்கியது கிடையாது- தங்கபாலு

 
முன்னாள் கங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மருத்துவமனையில் அனுமதி

எனது அரசியல் அனுபவத்தில் யாரிடமும் பணம் வாங்கியதும் கிடையாது வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தெரிவித்துள்ளார்.

Image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவல்துறையினர் அழைப்பானை அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக் கூடாது. இதைப் பற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன். உயிரிழந்த காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் ரூபி மனோகருடன், தன்னுடைய பெயரும் இருப்பது தவறானது. அதாவது எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ் காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது.

தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து” என்றார்.