சவுக்கு சங்கர் அம்பலப்படுத்திய ஊழல்- தமிழகமெங்கும் பட்டியல் சாதியினருக்கான நிதியில் பல ஆயிரம் கோடி மோசடி: கிருஷ்ணசாமி

 
கிருஷ்ணசாமி

சென்னை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் துப்புறவு தொழிலாளர்களின் பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டுகிறார்.   

சவுக்குமீடியா என்ற பெயரில் யுடியூப்சேனல் நடத்திவரும் பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வாங்கி தருவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏமாற்றி கொள்ளையடித்தாகவும், செல்வப்பெருந்தகையும், ரவிக்குமார் நாராயணன் என்பவரும் சேர்ந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சேரவேண்டிய 230 வாகனங்களை தங்களுக்கு தெரிந்தவர்கள் பேரில் பதிவு செய்து ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து  சவுக்குசங்கர் வீட்டில்  சில ரவுடிகள் துப்புரவு பணியாளர்கள் வேடத்தில் பட்டப்பகலில் வீட்டில் பின்பக்ககதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு வீடுமுழுவதும் மனிதமலத்தை அள்ளி வீசி சென்றனர்.


 
இந்நிலையில் சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கூறும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, “ஆளுங்கட்சியை விமர்சித்துவிட்டார் என்பதற்காக, சவுக்கு சங்கரின் தாய் இருக்கும் வீட்டில் கழிவுகளை வீசி சென்றது எந்த விதத்தில் நியாயம்? என்ன சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது? சவுக்கு சங்கர் சொன்னதில் உண்மை என்னவென்றால்... சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநகராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் பெயரில் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் வழங்கக்கூடிய எந்தவித வாகனங்களும், துப்புரவு பணியாளர்களிடம் இல்லை. அவர்களுடைய பெயரில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியலின மக்களுக்கு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வழங்கவேண்டிய நிதி, ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பெயரில் ஒருசில அரசியல் கட்சிகள் மட்டுமே அபகரித்து கொள்கின்றன. தாட்கோ மூலம் கிடைக்கக்கூடிய நிதியில் மூன்றரை ஆண்டுகளில் முறைகேடு நடந்துள்ளது. இதையே சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.