வாஸ்து அறிவோம் : உங்கள் வீடு வாஸ்து பலம் பெற இவற்றை செய்யுங்கள்..!

 
1

வாஸ்து சாஸ்திரம் மிகப்பெரும் கடல் போன்றது. அதில் நாம் அவசியம் பின்பற்ற சில வாஸ்து விதிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிலர் வீட்டின் சில பகுதிகளை புதிப்பித்து கட்ட விரும்புவார்கள். அப்படி செய்யும் போது வீட்டின் எந்த ஒரு பக்கத்திலும் இரண்டு சுவர்கள் சேரும் முனைப்பகுதியை உடைத்து விடாமல், வீட்டின் பகுதிகளை புதுப்பித்து கட்டிக்கொள்ளலாம். மாலை நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்குகள் போட வேண்டும். பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு அறையும் வெளிச்சம் இன்றி இருக்க கூடாது. உங்கள் வீட்டின் மாடிப்படிகள் தொடக்கத்தை கிழக்கு, வடக்கு திசைகளை நோக்கி ஏறும் வகையில் அமைக்கக்கூடாது

வீட்டில் விஷ தன்மை வாய்ந்த செடிகள், பால் வடியும் செடிகளை வளர்க்க கூடாது. இத்தகைய செடிகள் உங்கள் வீட்டு மதில் சுவரை தாண்டி வெளியில் உங்களுக்கு தோட்டம் இருக்கும் பட்சத்தில் அங்கு இத்தகைய செடிகளை வளர்க்கலாம். வீட்டின் முன்பாக வாஸ்து குறைபாட்டை சரி செய்வதாக கூறப்படும் கண்ணாடி கிரிஸ்டல்கள் போன்றவற்றை மாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மனிதனின் முகத்தில் இருக்கின்ற வாய் மற்றும் மூக்கு போன்றது. எனவே வீட்டின் கிழக்கு, வடக்கு பகுதிகளில் தேவையற்ற அடைப்புகளை ஏற்படுத்த கூடாது. இந்த இரண்டு திசைகளும் வீட்டிற்குள் செல்வம் மற்றும் பிற நன்மைகளை கொண்டு வரும் திசைகள் என்பதால் இந்த பகுதிகள் எப்போதும் காலியாக இருப்பது நல்லது.

வீட்டின் மேற்கு, தெற்கு திசைகளானது மனித உடலில் சிறுநீர், மலம் வெளியேற்றும் உறுப்புகளை ஒத்த திசைகள் ஆகும். இந்த இரண்டு திசைகளும் வீட்டிற்குள் தீமையான சக்திகளை நுழையச் செய்யும் சக்தி படைத்தது என்பதால் வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகள் எப்போதும் அதிக திறப்புகள் இல்லாமல் அடைப்புகள் ஏற்படுத்தி வைப்பது நல்லது.