கே.எஃப்.ஜே நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி – ஓராண்டாகியும் பணம் கிடைக்காத சோகம்!
கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணத்தை ஏமாந்த மக்கள் நேற்று கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டிவியில் அடிக்கடி தோன்றி, கே.எஃப்.ஜே-ல வெறும் 1999 ரூபாய் செலுத்தி 100கிராமுக்காக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினரா சேர்ந்துட்டேன். 5 வருஷத்திற்கு அப்புறம் அந்த தங்கத்தை எடுத்து என் பொண்ணு கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்துவேன் என்று சிரித்து கொண்டே கூறுவார். இதை நம்பி சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் , வளசரவாக்கம் பகுதி மக்கள் பலரும் இந்த திட்டத்தில் சேர்ந்தனர்.
இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலானதாகக் கூறப்பட்ட நிலையில் கடன் நிலுவை தொகைக்காக கே.எஃப்.ஜே பார்ட்னர்களில் ஒருவரான சுனில் செரியன் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பணத்தை திரும்பிக்கேட்க, நகைக்கடை சார்பில் கொடுக்கப்பட்ட 5 கோடி ரூபாய்க்கான செக்-குகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்க, நிர்வாகிகள் பணத்தை தந்துவிடுவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு ஓராண்டு ஆகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.கே.எஃப்.ஜேக்கு சொந்தமான இடங்களை முடக்கி அதன் மூலம் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.