இளைஞர் கவின் ஆணவக்கொலை : சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது..!!
நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை, சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் பட்டியலின இளைஞர் கவின், கடந்த 27ம் தேதி நெல்லை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த கவின், நெல்லையை சேர்ந்த உதவி ஆய்வாளர் தம்பதியான சரவணகுமார் - கிருஷ்ணவேணியின் மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஞாயிறு அன்று தன் காதலியை பார்ப்பதற்காக கவின் சென்றுள்ளார். இதனையறிந்த அவரது காதலியின் சகோதரன் சுர்ஜித், கவின் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் சுர்ஜித்தே பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று தானாக சரணடைந்தார். தனது சகோதரியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்ததால் கவினை கொன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களான உதவி ஆய்வாளர் தம்பதியின் தூண்டுதலின் பேரிலேயே , தங்களது மகன் கொலை செய்யப்பட்டதாக கவினின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர்கள் தம்பதி மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து சரணடைந்த சுர்ஜித் மற்றும் அவர்களது பெற்றோர் உதவி ஆய்வாளர்கள் மீதும் கொலை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுர்ஜித் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனிடையே பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், 4வது நாளாக கவினின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த நிலையில், கைதான சுர்ஜித்தின் தந்தையும், சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


