“விஜய் அவர்கூட இப்ப இருக்குற சகவாசங்கள கட் பண்ணிக்கணும்” - கஸ்தூரி அட்வைஸ்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான கூட்டணி சரி வராது என பாஜக பிரமுகர் நடிகையுமான கஸ்தூரி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும்,பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு ஏற்று வழிபட்டதுடன்லிங்கோத்பவரை மனமுருக சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, “நடிகர் விஜய் தலைமையில் கூட்டணி தற்போது சூழ்நிலைக்கு சரிவராது. கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே விஜய் பக்கம் இருக்கிறார்கள், ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை. விஜய் சுய சிந்தனையுடன் செயல்பட்டு மக்களுக்கான தலைவனாக செயலாற்ற வேண்டும். தற்போது உடன் உள்ளவர்களை விலக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
கரூரில் உயிரிழப்புகளை சந்தித்த குடும்பம் கூட விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கை இழக்கவில்லை அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும். விஜய் முடங்கி விடக்கூடாது எனவும் இதையெல்லாம் உடைத்து விட்டு நடிகர் விஜய், ஆந்திர மாநில துணை முதல்வர், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டின் மாற்றத்திற்கான தளபதியாக உருவாக வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும். டிடிவி தினகரன் பாஜக உடன் தொடர்ந்து பல வருடங்களாக பயணித்தவர், பாஜகவுடன் எந்த முறிவும் இல்லை. இபிஎஸ் உடன் தான் அவருக்கு கருத்து வேறுபாடு. வேறுபாடுகளை முறியடித்து வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகும்” என்றார்.


