கரூர் மாணவி தற்கொலை : உச்சபட்சத் தண்டனை வழங்க சீமான் கோரிக்கை!!

 
seeman

குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்தி, உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். 

மாணவி கடிதம்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருகிறது. அரும்பாக மலரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன். எதுவும் செய்யவியலா கையறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரும் அவல நிலையும் கண்டு உள்ளம் குமுறுகிறேன்; அறவுணர்ச்சியும், நீதியும் சாகடிக்கப்பட்டு பிஞ்சுகளின் உயிரைக்குடிக்கும் இக்குற்றச்சமூகத்தில் அங்கம் வகிப்பதற்கு குற்றவுணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறேன். பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக நேரும் இக்கொடுமைகள் அவர்களது எதிர்காலம், பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.

seeman

ஆகவே, இவ்விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீரியக் கவனமெடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக தீவிரமான சட்டநடவடிக்கைகளை எடுக்கத் துணிய வேண்டும் எனவும், தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.