"பாலியல் குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் தீர்ப்பு " - அன்புமணி கோரிக்கை!!

 
pmk

கரூர் மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் கோவை மாணவி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பதவறை கண்டும் காணாமல் விட்ட தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மாணவி கடிதம்

இந்த சூழலில் கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   மாணவியின் சடலத்தின் அருகே அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.  அதில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அந்த மாணவி எழுதியிருந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

anbumani


இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனையளிக்கிறது.  அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெண்ணெய்மலை மாணவியை பாலியல் வன்கொடுமைகளுக்கு  உள்ளாக்கி  தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்! கோவை, கரூர், திண்டுக்கல், சென்னை என கல்விக்கூடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன செய்தாலும் சட்டத்தில் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான். இதை மாற்ற வேண்டும்! பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதி வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு  வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.