"மாணவி தற்கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை" - பள்ளி நிர்வாகம் திடீர் கடிதம்!

 
மாணவி தற்கொலை

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் ஈரம் காயும் முன்பே சில நாட்களுக்கு முன் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் உருக்கமான கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கினார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. குறிப்பாக மாணவி எழுதிவைத்த கடிதம் கண்ணீரை வரவழைத்தது.

மாணவி கடிதம்

அந்தக் கடிதத்தில், "பாலியல் தொல்லையால் சாகுர கடைசி பெண்ணும் நானா தான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வாச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில வாழ ஆசைப்பட்ட ஆசைப்பட்டேன். ஆனா இப்ப பாதியிலேயே  போறேன் இன்னொரு தடவை இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் பெருசாகி நிறைய பேத்துக்கு ஹெல்ப் பண்ணனும் ஆசை ஆனால் முடியவில்லை” என குறிப்பிட்டு அப்பா, அம்மா உறவினர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : எங்களுக்கு சம்பந்தமில்லை என பள்ளி நிர்வாகம் வாட்சப் கடிதம்
 
இச்சூழலில் மாணவி படித்துவந்த பரணி பார்க் பள்ளி நிர்வாகம், பள்ளியில் படித்துவரும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் கடிதம் எழுதியுள்ளது. அதில், "நமது பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு நம்மையெல்லாம் சொல்லொணா துயரத்திற்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.