"அண்ணாமலைக்கு இப்போ அஷ்டமத்து சனி... அதனால் தான் இப்படி எல்லாம் செய்கிறார்"- கார்த்தி சிதம்பரம்
ஜோதிடர் ஆலோசனைப்படி அண்ணாமலை பரிகாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., “சீமான், வருண்குமார் இருவரும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு; ஒரு தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை. இதனால் மசோதா நிறைவேறாது. அண்ணா பல்கலை., மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் தான் சிபிஐ விசாரணை கேட்க வேண்டும். இந்த வழக்கில் தேவையில்லை. தொடர் குற்றவாளி எப்படி வெளியே இருந்தார் என்பது தெரியவில்லை. காவல்துறை என்ன செய்தது? இதில் அவர் தனிநபராக ஈடுபட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. யாரேனும் உடைந்தையாக இருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்.
ஜோசியர் ஆலோசனைபடி அண்ணாமலை பரிகாரம் செய்துள்ளார். அவரது கடக ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. ஆறுபடை முருகனுக்கு காலனி இல்லாமல் நடந்து, சாட்டையடி கொடுத்தால் நல்லது என்று கூறியிருக்கலாம் என்றார். அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கட்டணம் வசூலிக்க கூடாது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது சமுதாய பிரச்சினை. அதற்கு அரசு மீது சாயம் பூச கூடாது. சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்தவும் செய்கின்றனர். ஒரு காலத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு நிதியமைச்சரின் வயதை தாண்டி விட்டது என்று மோடி கிண்டல் செய்தார். தற்போதைய நிலையில் நிதியமைச்சரின் தாத்தா வயதையும் டாலர் தாண்டிவிட்டது. பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணம் கொடுக்காதது போன்ற காரணங்களால் தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீர்செய்ய மத்திய அரசுக்கு பக்குவம் பத்தாது” என்று கூறினார்.