கரகாட்டம்: 7 நாட்களுக்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

 
கரகாட்டம்

ஆடல்-பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால், 7 நாட்களுக்குள் காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும். அல்லது அனுமதி இல்லை என  எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

madurai high court

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்கு உட்பட்ட   சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள  கிராமங்களில் கோவில் திருவிழாக்களை  முன்னிட்டு  ஆடல்- பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகள் நடந்த  அனுமதி  கோரி தனித்தனியே ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள்  நீதிபதிகள் M.S. ரமேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், கலை நிகழ்ச்சிகள்  நடத்த காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தும் உரிய பதில் இல்லாததால், அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

காயத்ரி கரகாட்டம்

மனுவை விசாரித்த நீதிபதிகள், “மனுக்கள் மீது பதிலே கூறாமல் இருப்பது  ஏற்புடையதல்ல.  எனவே ஆடல்-பாடல் , கரகாட்டம்  உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், 7 நாட்களுக்குள் காவல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும். அல்லது ,  அனுமதி இல்லை என   தெரிவிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என குறிப்பிட்ட நீதிபதிகள்.   காவல்துறை தலைவர் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் புதிதாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என பரிந்துரைத்தனர். தொடர்ந்து, உயர்நீதிமன்றக் கிளையில்  இன்று விசாரணைக்கு வந்த மனுக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டனர்.