காரைக்கால் மாணவனுக்கு எலிபேஸ்ட் கொடுத்து கொலை - சகாயராணி வாக்குமூலம்..

காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சக மாணவியின் தாயார் சகாய ராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
காரைக்காலில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன் படிப்பு, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் முதல் மாணவனாக இருந்து வந்துள்ளான். இதனால் அதே வகுப்பில் படித்து வந்த தனது மகளுக்கு போட்டியாக இருப்பதாக சக மாணவியின் தாயார் கருதியுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுவனின் உறவினர் கொடுத்ததாகச் சொல்லி வாட்ச்மேனிடம் அவர் கொடுத்துள்ளார். வாட்ச்மேனும் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த பால மணிகண்டனிடம் கொடுத்திருக்கிறார்.
அதனைக் குடித்த சிறுவன் வீட்டிற்குச் சென்ற சிறுவன் பலமுறை வாந்தி எடுத்துள்ளான். அத்துடன் மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பேரில் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியாவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தியது. அறிக்கையில், மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்றும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தவறில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
அதெநேரம், பேதி மருந்து மட்டும் கொடுத்து மாணவனை கொலை செய்ததாக ஏற்கனவே சகாயராணி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், காரைக்கால் நகர் போலீசார் சகாயராணியை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், கடையில் எலி பேஸ்ட் வாங்கி மாணவன் பாலமணிகண்டனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகளைவிட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து மாணவனை சகாயராணி கொலை செய்தது உறுதியாகியிருக்கிறது.