மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்: கனிமொழி எம்.எல்.ஏ வலியுறுத்தல்..!
கோவை சரவணம்பட்டியில் கோயம்புத்தூர் கேலக்ஸி ரோட்டராக்ட் மன்றம் மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்பட்டஇந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதை பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து, மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் இந்த போட்டி நடைபெற்றது.
நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.‘கடவுளின் குழந்தைகள்’ என்று இவர்களை அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்காக நடத்தப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் பாராட்டுக்குரியது.
தவெக அரசு விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் மேலும் பல உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.
இத்தகைய சிறப்பான போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், இதில் பங்கேற்ற 15 மாநிலங்களை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.

