மறைந்த தோழர் சங்கரய்யாவுக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி- கமல்ஹாசன்

 
kamal

சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

1921 ஆம் ஆண்டு ஜூலை நெல்லையில் பிறந்த சங்கரய்யா தனது இளமைக்காலம் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1986 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும்,  1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராகவும் பணியாற்றினார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரய்யா இன்று உயிரிழந்தார் .

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “மாபெரும் தோழர் மறைந்தார். நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார். 


சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின்  நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.  பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.