வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை - விஜயகாந்துக்கு கமல்ஹாசன் புகழாரம்

 
kamal

விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.