வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக புறப்பட்டார் கள்ளழகர்
மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கள்ளர் வேடமணிந்து கோவிலிலிருந்து புறப்பட்டார் சுந்தரராஜப்பெருமாள்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை 05.35 மணி முதல் 05.55 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 17ந் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழாவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக இன்று தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லத்தில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக நாளை காலை மதுரை மூன்றுமாவடி சென்றடையும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நாளை மாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள 495 மண்டப படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் 01ஆம் தேதி காலை சரியாக ஐந்து முப்பத்தி ஐந்து மணி முதல் 05.55மணிக்கு வைகை ஆற்றில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மண்டபத்தில் எழுந்தருள்வார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகரை வழி படுவர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர், இரண்டாம் தேதி மதியம் கோவிலில் இருந்து புறப்பாடகி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து அன்று இரவு ராமராயர் மண்டபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும், 3ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் ராஜா சேதுபதி மண்டபடியில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுவதை தொடர்ந்து நாலாம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து மீண்டும் தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்கு புறப்படுவார். 4ஆம் தேதி இரவு அப்பன் திருப்பதி கிராமத்தில் தங்கும் கள்ளழகர், ஐந்தாம் தேதி காலை புறப்பாடாகி 10 மணிக்கு தனது இருப்பிடமான அழகர் கோவிலை வந்தடைவார். அதனை தொடர்ந்து ஆறாம் தேதி உற்சவர் சாந்தி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல் துறை சார்பில் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

