கலைஞர் நினைவுநாள் : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி..!!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி , முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள , ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச் செயலாளர் துரைமுருகன் , திமுக எம்பி கனிமொழி உள்பட திமுக மூத்த தலைவர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , முதலாவதாக கட்சியினுடைய தலைமை நிர்வாகிகளும், அவர்களை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக தொண்டர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலைஞர் உருவப்படங்களுடன் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர் .
ஓமந்தூரார் வளாகம், வாலாஜா சாலை, கலைவானர் அரங்கம் வழியாக பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தை வந்தடைகிறது. அப்போது கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அமைதி பேரணி நடைபெறும் வழி எங்கிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் , மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மேடைகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் தலைமையிலான அமைதி பேரணிக்காக சிவானந்த சாலை முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


