‘‘புரூடா’’ விடும் மோடி! பாஜகவின் கனவு, கனவாகவே போனது- கி.வீரமணி

 
veeramani

400-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பிரதமர் மோடி - பா.ஜ.க.வின் கனவு, கனவாகவே போனது என்று திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

k veeramani

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஜூன் ஒன்றாம் தேதி, நம் நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தலின் 7 ஆம் கட்டத் தேர்தல் (ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, சுமார் 40 நாள்களுக்குமேலாக தொடர்களாக நடைபெற்று) முடிவடைய இருக்கிறது. ஒரே நாளில் அல்லது 2 கட்டங்களாகக்கூட தேர்தல் ஆணையம் நினைத்து, சரியாகத் திட்டமிட்டிருந்தால், முடிந்திருக்கக் கூடியது. இது யாருடைய வசதிக்காக இப்படி பிரித்துப் பிரித்து நடத்தி, பிரதமர் மோடி போட்டியிடும் வண்ணம் வாரணாசி தொகுதி போன்றவை கடைசிக் கட்டமாக நடைபெற ஏற்பாடாகி, தேர்தல் முடிவுகள், வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றது.

இந்தத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, பா.ஜ.க.வின் திட்டமிட்ட 400-க்குமேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற உரத்த குரல் முழக்கமும், அதற்கு ‘ஒத்து ஊதி’, ‘கோரஸ்’ பாடிய பெருமுதலாளிகளின் செய்தி ஊடகங்களான தொலைக்காட்சி நிறுவனங்களும், பிரபல ஹிந்தி, ஆங்கில நாளேடுகளும் இந்த 6 கட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முந்தைய பழைய 400 ‘பல்லவி’யைப் பாட முடியவில்லை. பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எண்ணம், சிதறு தேங்காயாகி, புஸ்வாணமாகி, ‘‘பொய்யாய், கனவாகி, பழங்கதையாய்’’ ஆகிவிட்டது! பா.ஜ.க.வின் வயிற்றில்  புளியைக் கரைக்கும் அளவுக்கு... கடுமையான ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை இந்தியா கூட்டணித் தலைவர்கள், குறிப்பாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, அதுபோலவே, நாடு முழுவதும் காங்கிரஸ் பிரச்சார சூறாவளியாக - சுனாமியாக - மோடியின் கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்து - நாள்தோறும் இளந்தலைவர் ராகுலும், மற்ற கூட்டணித் தலைவர்களும் செய்யும் பிரச்சாரம் பா.ஜ.க.வின் ‘வயிற்றில் புளியைக் கரைக்கிறது.’

K veeramani

ஏழு கட்டத் தேர்தல்மூலம் எதிர்பார்க்கப்பட்ட - பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் எண்ணம் - விளைவு அவர்களுக்கு எதிர்விளைவாகவே அமைந்தது! தேர்தல் விதிமுறை சட்டத்தை அலட்சியப்படுத்தி....அதனால்தான், ஒவ்வொரு கட்டத்திலும் நிதானமிழந்து, உச்சவரம்பின்றி, ‘‘கோணிப் புளுகன் கோயபெல்சையும்‘’ மிஞ்சும் வகையில் தனது பொய்யுரைத் தொழிற்சாலையிலிருந்து புதுப்புது ‘‘புரூடா’’க்களை, துளியும் கூச்சநாச்சமின்றி, தேர்தல் விதிமுறை சட்டத்தை அலட்சியப்படுத்தி, பச்சையாகவே, வடபுலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி -‘‘ஹிந்துக்களின் சொத்துக்களை எல்லாம் இந்தியா கூட்டணி பதவிக்கு வந்தால், முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.’’ ‘‘தாலியைப் பறித்து அவர்களுக்குத் தங்கமாகத் தருவார்கள்.’’ ‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, முஸ்லிம்களுக்கே தனி இட ஒதுக்கீடு என்று தாரைவார்ப்பார்கள்.’’ ‘‘இராமர் கோவிலை இடிப்பார்கள்; பால இராமன் மீண்டும் முந்தைய டெண்டுக்கே வந்துவிடச் செய்வார்கள்.’’ ‘‘ஸ்டாலின் பதவிக்கு வந்துவிடுவார்.’’ ‘‘இந்தியா கூட்டணித் தலைவர்களின் பேச்சு, அழகிகளின் போட்டி நடனம் என்ற அருவருக்கும் நடனமாக உள்ளது’’ என்றெல்லாம் பேசியுள்ளார்.

இந்தியா கூட்டணித் தலைவர்கள்மீது அபாண்ட அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி! இவற்றிற்கெல்லாம் உச்சமாக, இறுதி நேரத் தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு ‘மெகா பொய் மூட்டையை’ அவிழ்த்துக் கொட்டி, இந்தியா கூட்டணித் தலைவர்கள்மீது அபாண்ட அவதூறு மழை பொழிந்துள்ளார்! ‘‘அண்மையில் சில நாட்களாக இந்தியா கூட்டணி - ராகுல் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்; காரணம் தெரியுமா? அவர்களுக்கு, அப்பெருமுதலாளிகளான இந்த இருவரிடமிருந்தும் டெம்போ வேன்களில் மூட்டை மூட்டையாக பண மூட்டைகள் போய்க் கொண்டிருந்தபடியால், அவர்களைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இப்படி ஒரு பேரம் (Deal) நடைபெற்றுள்ளது. ஒரே இரவில் அவர்களைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்கள்’’ என்று தேர்தல் மேடைப் பிரச்சாரம் செய்துள்ளார் பிரதமர் மோடி. (ஆதாரம்: ‘தி ஹிந்து’ ஆங்கிலம், பக்கம் 11, 27.5.2024).

பிரதமர் மோடியின் அவதூறான குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியின் சரியான பதிலடி! இதற்கு உடனடியாக தக்க பதிலடியை ராகுல் காந்தி சரியாகக் கொடுக்கத் தவறவில்லை. ‘‘சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை முதலியவற்றை பிரதமர் மோடி அனுப்பி, அதைக் கண்டுபிடிக்க முழு விசாரணையை ஏவிவிடலாமே; எல்லாமே பிரதமர் மோடி அரசிடம்தானே உள்ளது? ஏன் தயக்கம்?’’ என்று வீடியோ பதிவில் ராகுல் காந்தி, மோடியின் அவதூறான குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதில் மோடியின் மற்றொரு தந்திரம், சூழ்ச்சி என்னவென்றால், ‘‘மீண்டும் மோடி பதவிக்கு வந்தால், ஒடுக்கப்பட்டோருக்குள்ள இட ஒதுக்கீட்டை (எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி.) ராகுல் மற்ற தலைவர்கள் ஒழித்துவிடுவார்கள்’’ என்று பேசுவது, பேச்சின் திசை திருப்பலாக ‘‘அதானி, அம்பானியின் டெம்போ வேன் பண மூட்டைகளைப் பெற்றதால், இப்படி பிரச்சாரம் திசை மாறி, அதானி, அம்பானியை தாக்காமல், இதனைப் பெரிதாகப் பேசி வருகிறார்கள்’’ என்று கடைசியாக இப்படி ‘‘அவதூறு அஸ்திரங்களை’’ வீசியுள்ளார். மக்கள் எவராவது இதை நம்புவார்களா? தோல்வி பயம் உச்சத்தைத் தொட்டுவிட்டதால், கடைசி நேர உத்தியாக இதனை செய்கிறார். இதற்குத் தக்க பதிலடியாக, ‘‘அவரது அனுபவத்தைத் தான் மோடி சொல்கிறார் போலும்‘’ என்று ராகுல் காந்தி,  தனது உடனடி வீடியோ பதிவு பதிலில் குறிப்பிட்டிருப்பது செம்மையான பதிலடியாகும்!

ஜனநாயகம் வலிவும், பொலிவும் பெறட்டும் -  ஜூன் 4 வரலாறாகட்டும்! ‘‘தூக்கத்தை இழந்தவர்கள்’’ என்று தமிழ்நாட்டிற்கு வந்து பேசிய பிரதமர் மோடியும், அவரது ஏவுகணைகளும் இப்போது தூக்கத்தை இழந்ததோடு, துக்கத்தையும் சந்திக்கும்படி இந்தக் கடைசி கட்டத் தேர்தலும் ஆகிவிடுமோ? என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஓட்டுப் பெட்டிகள் ‘கருத்தரிக்கும்‘ வாய்ப்பும் நாளுக்கு நாள் - உச்சநீதிமன்ற வழக்குகளாலும், ஆணைகளாலும் மங்கி மங்கி வருகிறது! நாடு உண்மை சுதந்திரத்தைப் பெற்று, ஜனநாயகம் வலிவும், பொலிவும் பெறட்டும்! ஜூன் 4 வரலாறாகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.