28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி.. லஞ்ச பணம் ரூ.500..!

 
1

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர், நுகர்வோர் தொடர்பான பல்வேறு வழக்குகளை தொடுத்திருப்பதோடு, சமூக ஆர்வலராக உள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக அவர் மின்வாரியத்தை அணுகிய போது, 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அந்த அதிகாரி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கதிர்மதியோன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் நோட்டுகளை லஞ்சம் கேட்ட அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை போலீசார் அந்த அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சியமாக கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 

ஆனாலும், கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை. இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டு அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில், கதிர்மதியோன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 500 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 

அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கதிர்மதியோன் கூறுகையில், "28 ஆண்டுகளுக்கு பிறகு லஞ்சமாக கொடுத்த பணம் திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நீதித்துறையின் இந்த தாமதம் சற்று கவலை அளிக்கிறது. லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவதற்கு இதுபோன்ற தாமதமே காரணமாக அமைந்துவிடுகிறது. தங்கள் சொந்த பணத்தை கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விரைவாக பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

கதிர்மதியோன் திரும்பப் பெற்றுள்ள இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.