#JUST IN : "85 நாட்கள் ஆச்சு... புதுத் திட்டம் எங்கே?"தவெக பட்ஜெட்டைக் கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!

 
EPS

ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களான நிலையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.தவெக வாக்குறுதிகள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை -இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 85 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

"தமிழகத்தில் புதிய அரசு அமைந்து 85 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு புதிய திட்டமும் இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்படவில்லை. தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதிகள் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது வேதனையளிக்கிறது."

"மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள சூழலில், அதை எவ்வாறு சரிசெய்யப் போகிறார்கள்? அதற்கு அரசிடம் என்ன தெளிவான திட்டம் உள்ளது? என்பதை விளக்குவதற்கு இந்த அரசுத் தவறிவிட்டது. மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு போலி பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது."

தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், "சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் விட்டு ரீல் விடுவது தான் இந்த அரசின் ஒரே சாதனையாக உள்ளது. விளம்பர அரசியலை விட்டுவிட்டு மக்களின் நிஜப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி காரசாரமாகச் சாடியுள்ளார்.

தவெக ஆட்சி அமைந்த இந்த குறுகிய காலத்தில் ரூ.20,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் ..ரூ.10.98 லட்சம் கோடி கடனை எப்படி அடைக்கப் போகிறீர்கள்? என தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி.தாலிக்கு தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள்.

திமுகவைப் போல் கடன் வாங்குவதற்காக தான் குழு அமைத்திருக்கிறார்களோ என தவெக அரசு மீது சந்தேகம் - இபிஎஸ்

தவெக அரசின் முதல் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள், சட்டப்பேரவையிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.