டி.ஆர்.பாலு குறித்து அவதூறு பரப்பிய ஜூனியர் விகடனுக்கு ரூ.25 லட்சம் அபராதம்!

அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் வார இதழ் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, கடந்த 2014 ஆம் ஆண்டு சிவில் மான நஷ்டஈடு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், கடந்த 2012 ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழில் கேள்வி பதில் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தில், தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததாகவும் அதேபோல் திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாக பொய்யான செய்திகளை வெளியிட்டதாக கூறியிருந்தார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டதாகவும் இந்த செய்திகள் முழுக்க அவதூறு செய்தி ஆதாரமற்றவை என்றும் எனவே தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினரை பற்றியோ செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் தனக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரிக்கத் சென்னை உயர்நீதிமன்றம், டி.ஆர்.பாலு தொடர்பான செய்திகள் வெளியிட ஜூனியர் விகடன் வார இதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி ஏஏ நக்கீரன் முன்பு நடைபெற்றது. டி ஆர் பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டி ஆர் பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஜூனியர் விகடன் வார இதழுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.