மாதம்பட்டி ரங்கராஜை விடாமல் துரத்தும் ஜாய் கிரிசில்டா... மகளிர் ஆணையத்தில் புகார்
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இதனையடுத்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப தடை விதிக்கக் கோரி சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு துன்புறுத்தியதாக புகாரில் ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிசில்டா, “என் குழந்தைக்கு என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். எனக்கும் என் குழந்தைக்கும் ஏதேனும் நடந்தால் மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு. மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். மகளிர் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து புகார் அளித்துள்ளோம்" என்றார்.


