அண்ணாமலை கொங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜோதிமணி எம்.பி., வலியுறுத்தல்

 
jothimani

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து, அநாகரிகமான முறையில் ஊடகவியலாளரை விமர்சித்து விட்டு, பழியை தூக்கி கொங்கு மண்டல வட்டார வழக்கின் மீது போடுவது கடுமையான கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி குறித்து விமர்சித்து பேசிய அண்ணாமலை  " உதயநிதிக்கு பல்லு படாதது போல நெறியாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்" என கூறினார். இது மோசமான இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன்,  அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளன. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொங்கு மண்ணும்,மக்களும்  மரியாதைக்குப் பெயர்பெற்றவர்கள். ஒருவரை ஒருமையில் அழைக்காமல் மரியாதையோடு அழைக்கும் வழக்கம் உள்ளவர்கள். பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை தரம் தாழ்ந்து, அநாகரிகமான முறையில் ஊடகவியலாளரை விமர்சித்து விட்டு, பழியை தூக்கி கொங்கு மண்டல வட்டார வழக்கின் மீது போடுவது கடுமையான கண்டனத்திற்குரியதும், கொங்கு மண்டல மக்களை அவமதிப்பதுமாகும். அநாகரிகமான, அறுவறுக்கத்தக்க அரசியலையே தனது அடையாளமாக வைத்திருக்கும் அண்ணாமலை ஊடகவியலாளர்களிடமும்,கொங்கு மண்டல மக்களிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.