பெரியார் சீர்திருத்தவாதி அல்ல; ஒழுக்கம் இல்லாதவர்- ஜான் பாண்டியன்

 
john pandiyan

பெரியார் குறித்து சீமான் பேசியது சரியே, அது தப்பே கிடையாது என நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை பாளையங்கோட்டை எம்கேபி நகரில் உள்ள தென் தமிழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவே எங்கள் முடிவு. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறோம். இந்த தேர்தலில் பணம் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆறு மாதத்தில் பொது தேர்தல் வர இருப்பதால் இதில் கவனம் செலுத்தவில்லை. ஆளும் கட்சியைக் கண்டு எங்களுக்கு பயமில்லை. மக்கள் மனதில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் உள்ளது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. பண விநியோகத்தை கண்டு கொள்வது கிடையாது. இதுவரை புகார்கள் இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இலவச வாக்குறுதிகள் குறையும், ஊழல் ஒழியும். அரசியலின் தத்துப் பிள்ளையாக விஜய் வந்துள்ளார். திமுகவின் செயல்பாடு சரியில்லாத நிலையில் தான் விஜயை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். அரசியலில் போட்டியிட்டு வரட்டும் விஜய் குறித்து பேசலாம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மாநில அரசுக்கு பலவீனமாக அமையும் என்பதனால் அதனை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மூன்றில் ஒரு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திட்டமிட்டுள்ளது. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அரசு செவிசாய்க்க போவது கிடையாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போராடினாலும் அதே நிலை தான் இருந்து வருகிறது. மத்திய அரசு என்ற சொல்லை கூட மாற்றி ஒன்றிய அரசு என சொல்லி வெறுப்பு அரசியலை திமுக செய்கிறது. மத்திய அரசு கொடுக்கும் அனைத்து நிதிக்கும் முறையாக மாநில அரசு கணக்கு கொடுப்பது கிடையாது. 

பெரியார் ஒழுக்கம் இல்லாத ஒரு நபர் அவர் பெயரை பயன்படுத்தி ஓட்டுக்காக செயல்பட்டு அவரை பெரிய ஆளாக காட்டுகிறார்கள். அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை. தீண்டாமையை ஒழித்தவர் என்கிறார்கள், ஆனால் இப்போதும் தீண்டாமை தலை தூக்கி கொண்டு இருக்கிறது. பெரியார் தான் தீண்டாமையை ஒழித்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியார் தமிழகத்தின் சீர் திருத்தவாதி கிடையாது. காலம் மாறியதும் எழுச்சி உருவானது தானாக தீண்டாமை ஒழிய தொடங்கியது. பெரியார் வந்ததால் எதுவும் நடக்கவில்லை. ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் போன்ற இடங்களில் இன்றும் தீண்டாமை உள்ளது. பெரியாரின் வாரிசு என சொல்பவர்கள் தீண்டாமை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தீண்டாமையை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது கிடையாது. சீமான் பேசியது சரி அதில் எந்த தப்பும் இல்லை. தமிழகத்தில் நீதிபதிகள் ஜாதி பார்த்து தான் தண்டனை கொடுக்கிறார்கள், தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் என அனைத்திலும் ஜாதி பார்த்து தான் எனக்கு தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கடுமையாக வாதாடி நான் நிரபராதி என விடுதலை பெற்றேன். நீதிமன்றமே தானாக எடுத்து விசாரிக்கும் வழக்குகள் கூட ஜாதிகள் பார்த்து தான் எடுக்கப்படுகிறது. திருவள்ளுவர் மீது காவிச் சாயம் பூசியதாக சொல்கிறார்கள். ஆனால் திமுக அரசு அவருக்கு வெள்ளை ஆடை உடுத்தி பாதிரியாராக மாற்றி உள்ளது” என தெரிவித்தார்.