தமிழக மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறையின்றி செயலாற்றுகிறது- ஜவாஹிருல்லா

 
 ஜவாஹிருல்லா

தமிழக மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறையின்றி செயலாற்றுகிறது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம்”- ஜவாஹிருல்லா நம்பிக்கை

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த பத்து மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களது படகுகளும் மீன் பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் 504 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களும் மீனவர் பிரதிநிதிகளும் பிரதமர் அவர்களுக்குப் பலமுறை கடிதம் மூலமாகக் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதே இல்லை. தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாக ஆகிவிட்டது. 

மீனவர்கள்

ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை முழுக்க தோல்வி அடைந்து விட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. மீனவர்களின் படகுகளையும் சிறையில் இருப்பவர்களை மீட்கவும் ஒன்றிய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.