என் அம்மாவை பார்த்து இரண்டு மாதம் ஆகிவிட்டது : அண்ணாமலை..!

 
1

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்லடத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இந்த தேர்தல். 

கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் நல்லவர்கள் பேச துவங்க வேண்டும்.  உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் இருப்பேன். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன். கோவையில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை தூக்கி விட்டது. உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. 

இந்தியாவின் பரிமான தன்மையை மாற்ற 400 எம்பிக்கள் வேண்டும். எதிரணியினரை பேசவிடாமல் தடுக்க வேண்டும். கர்வத்திற்காக அல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கரூர்-கோவை இடையே ஆறு வழிச்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் எரிவாயு பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும். 

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பத்தாயிரம் கோடி வேண்டும். அந்தத் திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்றுத் தர முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுங்கள்.தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் இல்லாததால் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை. பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.

மக்களுக்காக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வியே கேட்பதில்லை. தற்போதுள்ள கோவை எம்பியை யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்து உள்ளீர்கள். அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை. என் அம்மாவை பார்த்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன். இப்போது மாற்றமில்லை என்றால்  எப்போதும் இல்லை என்பதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றேன்.