பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான் தான் - உடைத்து பேசிய சங்ககிரி ராஜ்குமார்

நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி தேர்தல் களத்தில் பங்கெடுத்து வருகிறார் சீமான். தனது தலைவராக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையே அவர் முன்னிறுத்துகிறார்.
மேலும், இலங்கைக்கு தான் சென்றபோது நடந்தவை குறித்து சீமான் விவரித்தவை விமர்சனங்களை உள்ளாக்கியது. பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படமும் நாம் தமிழர் மேடைகளில் இடம்பெறும். ஆனால், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற விமர்சனம் நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெங்காயம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார், “இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் சீமானைத்தான் கூறியதாக பலரும் கமெண்ட் இட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சங்ககிரி ராஜ்குமார், “பிரபாகரனுடன் சில ஆளுமைகள் இருக்கும் புகைப்படங்களையும், அண்ணன் சீமான் இருக்கும் புகைப்படத்தையும் கொண்டு வந்து இரண்டையும் அருகருகே வைத்து மேட்ச் செய்து தருமாறு எனக்கு நெருக்கமான ஒருவர் கேட்டிருந்தார். நான் எதற்காக என்று கேட்டபோது, சீமானுக்கு பிரபாகரனைப் பிடிக்கும் என்பதால் இந்த புகைப்படம் அவருக்கு சர்பிரைஸ் பரிசாக இருக்கும் என அவர் பதில் அளித்தார்.
நான் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவன், எனக்கு சீமானையும் பிரபாகரனையும் பிடிக்கும் என்பதால் நான் அதனை ஆர்வத்துடன் செய்துகொடுத்தேன். தொடர்ந்து, இதுதான் பிரபாகரனை சீமான் சந்தித்த புகைப்படம் என இணையதளங்களில் வலம் வர ஆரம்பித்தது.
நான் இதுகுறித்து என்னிடம் எடிட் செய்யச் சொன்னவரிடம் கேட்டேன். சீமானை உலக அரங்கில் கவனிக்கக்கூடிய ஒரு தலைவராக அந்த புகைப்படம் கொண்டு சேர்த்துள்ளது, அது நம்மால் நடந்ததாக இருக்கட்டும் என்று அவர் சொன்னார். நானும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால், பிரபாகரனை சந்தித்ததாக சீமான் சொன்ன கதைகள் எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தின.
பிரபாகரன் இமேஜை டேமேஜ் செய்ததோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியாரை டேமேஜ் செய்யும் நிலைக்கு சீமான் வந்துவிட்டார். சமூக நீதிக்கு அரணாக இருந்த இருவரையும் டேமேஜ் செய்து பிற்போக்குவாதிகளுக்கு இடம் அமைத்துக் கொடுக்கும் வேலையில் சீமான் இறங்கிவிட்டார் என்னும்போது, இதற்கு மேலும் உண்மையை சொல்லாமல் இருப்பது சரியல்ல என்பதால் சொல்லிவிட்டேன்” என்று கூறினார்.