"நாங்க கஷ்டப்பட்டதுக்கு இதுதான் பரிசா?" - தி.மு.க. தலைமையின் முடிவால் கொந்தளிக்கும் மூத்த நிர்வாகிகள்!

 
dmk

சட்டசபை தேர்தலில் தோல்விக்கு பின், கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

இதன்படி, கிளை செயலாளர், வார்டு செயலாளர், பகுதி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு, 45 வயது தான் வரம்பு. மேலும் இரண்டு முறை மட்டுமே ஒருவர் அந்த பதவி வகிக்க முடியும் என அறிவித்துள்ளது. இதே போல், ஒன்றிய செயலாளர், பேரூர் கழக செயலாளர் ஆகிய பதவிகளுக்கு, 60 வயது வரை தான் வரம்பு என அறிவித்துள்ளது. அன்னுார் பேரூராட்சியில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன.

இதில் இரண்டு வார்டுகள் தவிர, மற்ற 13 வார்டு செயலாளர்களும் 45 வயதுக்கு மேல் உள்ளனர். இதனால் வரும் உட்கட்சித் தேர்தலில் வார்டு செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. அன்னுார் ஒன்றியத்தில் தற்போதைய இரண்டு ஒன்றிய செயலாளர்களில், ஒரு ஒன்றிய செயலாளர் 60 வயதை கடந்ததால், அவரும் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அன்னுார் ஒன்றியத்தில், 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதில், 150க்கும் மேற்பட்ட கிளை செயலாளர்கள் 45 வயதை கடந்தவர்கள்.

எனவே கிராமப்புறங்களில், 60 சதவீதம் பேர் மீண்டும் பதவிக்கு வர முடியாத நிலை உள்ளது. தி.மு.க.,வினர் சிலர் கூறுகையில், 'பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்று, சொந்தக் காசை செலவழித்து கட்சி பணி செய்துள்ளோம். தற்போது 45 வயது என வரம்பு நிர்ணயித்தது கடும் ஏமாற்றத்தை தருகிறது. இதை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்' என்றனர்.