மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பா? ஓபிஎஸ் பதில் இது தான்..!

 
1

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த ஓ.பன்னீர் செல்வம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

"ஜெயலலிதா இல்லாத காலத்தில் நான் முதல்வர் பதவிக்கு வர விரும்பவில்லை என்று கூறினேன். என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் அமர வைத்தார்கள். அதை அப்படியே அவர்களிடம் திருப்பி ஒப்படைத்தேன். மூன்று முறையும் கட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியில் அமர்ந்தேன்.

நான் உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்த கட்சி இன்று இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளது. நான் என்ன நிபந்தனை வைத்தேன்? கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று கூறியது தவறா? ஒருங்கிணைப்பாளர், முதல்வர் பதவி உள்ளிட்ட எதையும் நான் கேட்வில்லையே? என் உழைப்பில் யாராவது இம்மிளவு குற்றம் சொல்ல முடியுமா?

துணை முதல்வர் பதவி கூட வேண்டாம் என்று தான் கூறினேன். பிரதமர் மோடி அமைச்சரவையில் நீங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் அமைச்சரவையில் பங்கேற்றேன். ஆனால், எனக்குரிய மரியாதையை அவர்கள் வழங்கவில்லை. முடிந்தவரை எனக்கு அவமரியாதை செய்தனர்.

கடைசியில் சட்ட விதிகளை மாற்றினார்கள், நான் நீதிமன்றம் சென்றேன். நீதிமன்றத்தில் நான் அதிமுக கொடி கட்ட கூடாது, வேட்டி கட்ட கூடாது என்றார்கள். இதையெல்லாம் யார் செய்தார்கள்?

தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்க நான் ஒரு தனி அமைப்பை தோற்றுவித்திருக்கிறேன். நான் அதில் உறுப்பினர்களை கூட சேர்க்கவில்லை. இருப்பவர்களை வைத்துக்கொண்டு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷாவிடம் பேசும்போது கூட அவர், நீங்கள் எல்லாம் பிரிந்து கிடக்கிறீர்கள், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. உங்களால் எப்படி ஜெயிக்க முடியும்? என்று கேட்டார். ஆனால், எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இபிஎஸ் இல்லை. அதனால் தான் இன்றைக்கு அதிமுக பாதாளத்தில் சிக்கி கிடக்கிறது" என்றார்.

முதல்வரை சட்டப்பேரவையில் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆளும் கட்சியினரை கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சந்திப்பது மரபு. இதில் அரசியல் இல்லை" என்றார்.

மீண்டும் இபிஎஸ் அழைத்தால் அதிமுகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, 'ஔவையார் என்ன சொன்னார்? மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று கூறிவிட்டு சென்றார்.