தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அஞ்சுகிறதா..? திருமாவளவன்..!
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது; “தமிழ்நாடு காவல்துறை இதில் காட்டும் மெத்தனம் உள்ளபடியே அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறதோ அந்த முகாந்திரம் விஜய் மீது இல்லையா? பிறகு ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அதேபோல், திட்டம் வகுத்து கொடுத்த அருண் ராஜ் மீதும், ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.
தமிழ்நாடு அரசும் காவல்துறையும், விஜய் மீதும், ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்குப் பதிவு செய்ய அச்சப்படுகிறதா அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை, இளைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது எனும் நடைமுறை கையாளப்படுகிறதா?
சுமார் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பாக நான் நயினார்பாளையம் எனும் இடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். புதுச்சேரி அருகே ஒரு சம்பவம் நடக்கிறது. அந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது, அது நடந்தது கூட அப்போது எனக்கு தெரியாது. ஆனால், கட்சிக்காரர்கள் ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றவுடன் அன்றைய விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த ரவி என் மீதும் வழக்குப் பதிவு செய்தார். இப்படி எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலும் என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது இல்லை. எதற்காக, யாருக்காக அச்சப்படுகிறார்கள்? எல்லோரும் சமம் எனும்போது அந்தக் கட்சியில் இதற்கு காரணமாக இருந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள், காலதாமதம் செய்தவர்கள், வேண்டும் என்றே காலதாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும்தானே வருகிறார். எனவே அவர் மீது வழக்கு தொடர்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம் என்ன அச்சம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.


