“என்னாது மின் கட்டணம் ரூ.7.46 லட்சமா?”- அதிர்ச்சியடைந்த பூவியாபாரி

நிலக்கோட்டை அருகே குடியிருக்கும் வீட்டுக்கு ரூபாய் 7 லட்சம் மின்கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்ததால் பூவியாபாரி அதிர்ச்சியில் உறைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கடை நடத்தி வருபவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு குல்லிசெட்டிபட்டி ஊராட்சி லட்சுமிபுரத்தில் உள்ளது . இந்நிலையில் இன்று காலை லட்சுமிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கட்டணமாக ரூபாய் 7 லட்சத்து 46 ஆயிரம் கட்ட வேண்டும் என அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது, இதனால் முருகேசன் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு முறையும் ரூபாய் 120 முதல் ரூபாய் 150 வரையில் மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த முருகேசனுக்கு ரூபாய் 7 லட்சத்து 46 ஆயிரம் கட்ட வேண்டும் என குறுஞ் செய்தி வந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தி காட்டுத் தீயாக பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கூடுதல் கட்டண குறுஞ்செய்தி தொடர்பாக ராமராஜபுரம் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் ரீடிங் எடுத்து ஆன்லைனில் பதிவிடும்போது ஏற்பட்டுள்ள கவனக்குறைவு காரணமாக 65 ஆயிரம் யூனிட் மின்சாரம் கூடுதலாக ரீடிங் காட்டப்பட்டு இந்த தொகை குறுஞ்செய்தியாக வெளிவந்துள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட ரீடிங் நீக்கம் செய்யப்பட்டு குடியிருப்பு வீட்டின் உள்ள மீட்டரில் காட்டப்பட்ட யூனிட்டின் அளவு மின் கட்டணமே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தனர். ரீடிங் பதிவு செய்தவர் ஒரு நம்பரை சேர்த்து அடித்ததன் விளைவாக குடியிருக்கும் வீட்டுக்கு மின் கட்டணமாக பல லட்சம் செலுத்த வேண்டும் என வந்த குறுஞ்செய்தி அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.