மீண்டும் பழைய நிலைக்கே போகிறதா இலங்கை? வாரத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் மட்டுமே..!
மேற்காசியாவில் நிலவும் போரால், பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க, நம் அண்டை நாடான இலங்கை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, க்யூ.ஆர்., குறியீடு அடிப்படையில் எரிபொருள் வினியோகத்தை முறைப்படுத்தும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2022ல், இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது, இந்த முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அந்த முறையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக, இலங்கை எரிசக்தி துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, செல்லுபடியாகும் க்யூ.ஆர்., குறியீடுகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
மேலும், வாகன வகைகளுக்கு ஏற்ப வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பைக்குகளுக்கு, வாரத்திற்கு 5 லிட்டரும், கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15, வேன்களுக்கு 40, பஸ்களுக்கு 60 மற்றும் லாரிகளுக்கு 200 லிட்டர் எரிபொருள் மட்டும் வழங்கப்படும்.

