மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை, 14 பேர் தங்கள் செல்போன் மூலமாக எடுத்துள்ளதாகவும், அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம் எனவும், உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.