தனியார் கல்லூரி விடுதி உணவில் பூச்சி - மாணவர்கள் மயக்கம்
கோவை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதி இரவு உணவில் பூச்சி இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ளது நேரு பொறியியல் கல்லூரி. இங்கு 2,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் வெளிமாவட்டம், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதி இரவு உணவில் பூச்சி இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இரவு உணவு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு, விடுதியில் வழங்கப்பட்ட தேநீரிலும் பூச்சிகள் காணப்பட்டதாக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனிடையே ஒரு சில மாணவர்கள் விடுதி முன் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர். தற்பொழுது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


