இந்திய சினிமா ஒரு மிகச்சிறந்த ஸ்டோரி டெல்லரை இழந்துவிட்டது..!- பாரதிராஜா மறைவுக்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு!

 
1

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். இந்தத் திடீர் மறைவுச் செய்தி திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழமான இரங்கலைத் தெரிவித்து வரும் சூழலில்,தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி  இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் 

இந்திய சினிமா தனது மிகச்சிறந்த ஸ்டோரி டெல்லரில் ஒருவரான பாரதிராஜாவை இழந்துவிட்டது. கிராமத்து மண்ணின் வாசனையையும், மனித உறவுகளின் அழகையும், காதலின் வெள்ளந்தித் தனத்தையும், சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளையும் காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர். அவரது திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறைத் திரைப்பட இயக்குனர்களுக்கும் ஊக்கமளித்தன. மதிப்புமிக்க பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற பாரதிராஜாவின் இந்திய சினிமாவிற்கான பங்களிப்பு அளப்பறியது

அவர் இயக்கிய 'ஆராதனா' திரைப்படத்தில் 'புலிராஜு'  என்ற கதாபாத்திரத்தில் அவரது இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமா மீதான அவரது ஆர்வம், எளிமை மற்றும் தனது கலை மீதான அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்தன. அவர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும், அவரது அசாதாரணமான திரைப்படங்களின் மூலம் அவரது மரபும் பெருமையும் என்றென்றும் நிலைத்திருக்கும். அமைதியாக உறங்குங்கள், "இயக்குனர் இமயம்" பாரதிராஜா. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.