அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்!!

 
cm stalin

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்54 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (TNT) மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

stalin

2022-2023-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில், “செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர அறிவு (Machine Learning), நம்பிக்கை இணையம் (Block chain) போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது. இதனை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT) அரசால் அமைக்கப்படும். மாநிலத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

mk stalin

அதன்படி, சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (iTNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இம்மையம், புதுமைகளை (Innovations) ஒரு சேர அமைப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க ஒரு ஊக்கியாகச் செயல்பட்டு, உலகளவில் தமிழ்நாட்டை முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆழ்தொழில்நுட்ப (DeepTech) மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப முனைவோர்களை ஊக்குவித்து, பெரு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து, உயர்தொழில்நுட்ப முன்மாதிரி மற்றும் வடிவமைப்பு வசதிகளை அமைத்து உலகளாவிய இணைப்புகளை இந்த மையம் உருவாக்கும்.