வெறும் 6 மணி நேர இடைவெளியில் 345 மி.மீ மழை... ஆடிப் போன பெங்களூரு..!

 
1

பெங்களூரில் மே 10ஆம் தேதி இரவு தொடங்கி மே 11ஆம் தேதி அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. வடக்கு, தென்மேற்கு, மேற்கு என பெங்களூருவின் மூன்று பகுதிகளில் இடி, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

வெறும் 6 மணி நேர இடைவெளியில் 345 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது 34.5 சென்டிமீட்டர் என்று சொல்லலாம். இதில் டாப் 5 இடங்கள் என்று பார்த்தால் பெங்களூரு அர்பனில் கிதானஹள்ளி 129 மி.மீ, கடபகெரே 112.5 மி.மீ, துமகுருவில் உள்ள ஹெரூர் 105 மி.மீ, சென்னானஹள்ளி 104 மி.மீ, பெலவதா 101 மி.மீ என மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பெங்களூரு மண்டல விஞ்ஞானிகள் கூறுகையில், அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மொத்தம் 5 பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அவற்றில் 3 இடங்கள் பெங்களூருவில் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு 345 மி.மீ ஆகும். இவ்வாறு திடீர் கனமழைக்கு தென்னிந்திய தீபகற்பத்தை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தான் காரணம் என்கின்றனர்.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பார்த்தால் அதிகபட்சமாக ஆர்.ஆர்.நகரில் 62.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதுவே நகரின் மையப் பகுதியில் 1.6 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை எடுத்து பார்த்தால், பெங்களூரு மற்றும் அதனை ஒட்டியுள்ள கோலார், சிக்கபல்லபுரா, துமகுரு, ராமநகரா ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.