ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்ட புகார்: முதல் பரிசான கார் வழங்க இடைக்கால தடை
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 16ம் தேதி கோலாகமாக நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில், முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் மோசடி நடைபெற்றிருப்பதாக இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “ஜல்லிக்கட்டு தொடங்கி முதல் 3 சுற்றுகளில் பங்கேற்ற ஹரிகிருஷ்ணன் 5 காளைகளை பிடித்ததார். 3 ஆம் சுற்றின் போது அவர் காயமடைந்ததால் களத்தில் இருந்து வெளியேறினார். 33 எண் கொண்ட அவரது டீ சர்ட்டை வாங்கிக் கொண்ட கண்ணன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்யாமலேயே களத்திற்குள் நுழைந்ததார். ஹரிகிருஷ்ணன் அடக்கிய 5 காளைகளுடன் கண்ணன் அடக்கிய 8 காளைகளை சேர்த்து அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைதொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு வரும் வரை முதல்பரிசு வழங்கக்கூடாது எனக் கூறி மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்ட புகார் எழுந்ததால் கண்ணன் என்பவருக்கு முதல் பரிசான காரை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் வென்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்பட இருந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் பரிசு வென்ற கருப்பண்ணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.