"என்னை எல்லோரும் இசைக்கடவுளாக பார்க்கிறார்கள்! நான் இல்லாவிட்டாலும்.." - இளையராஜா உருக்கம்
நான் இசையமைக்கும்போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. சுத்தமாக இருக்கும்.கோயிலுக்கு போவதை விட இசை மிகவும் புனிதமானது என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் படமான ‘அன்னக்கிளி’ வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இசைப்பயணத்தில் 50 ஆண்டுகள் கடந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசை உலகில் அரை நூற்றாண்டை கடந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்து இளையராஜா பேசினார்.
அப்போது பேசிய இளையராஜா, “உங்களுக்கு தான் 50 வருடம். எனக்கு அப்படி எதுவும் இல்லை. அடுத்தடுத்து படங்களில் பணியாற்றி வருகிறேன். வருடம் தான் சென்றுகொண்டிருக்கிறதே தவிர, நான் அங்கேயே தான் இருக்கிறேன். நான் எப்போது எங்கிருந்து வந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன். நீங்கள் நினைவு வைத்து வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.எல்லோரும் இசைக்கடவுளாக பார்க்கிறார்கள், பார்த்துகொள்ளட்டும். அவர்கள் என்னை அந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்ற அன்பை காட்டுகிறது. நான் இசையமைக்கும்போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. சுத்தமாக இருக்கும். கோயிலுக்கு போவதை விட இசை மிகவும் புனிதமானது. அதனால் தான் மக்கள் என்னை என்னென்னமோ சொல்லி கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் என்றென்றும் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.
‘அன்னக்கிளி’ பட பிளாஷ்பேக் குறித்து பேசியவர், ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு நான் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு என்று ஒரு படம் வந்தது. அப்போது தான் எப்படி பாடலுக்கு இசையமைப்பது என யோசிக்கிறேன். ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என பாடல் வரிகளை எழுதிவிட்டார்கள். இதற்கு இசையமைக்க வேண்டும் என யோசித்துக் கொண்டே இருப்பேன். 250 படங்களில் உதவியாளராக இருந்து இசையமைத்தாலும், எனக்கு என்று வரும்போது, எப்படி ஆரம்பிப்பது என யோசனை இருந்தது. இந்தப் பாடலை ஒரு ஹம்மிங்கில் தொடங்கலாம் என சாந்தோஷ் பீச்சில் நடந்து கொண்டே தொடங்கினேன். ஹம்மிங்கை நோட்ஸாக எழுதுவேன். நிறைய நாள் அதற்காக உழைத்தேன். இப்படித்தான் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இப்படி நான் இசையமைத்ததால் தான் அது இன்றும் உயிரோடு இருக்கிறது. அது உங்கள் ஆத்மாவாக வாழ்கிறது என்றார்.

