கூர்ந்து கவனித்தால், இதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.. - முதல்வர் ஸ்டாலின்..

 
cm stalin

 வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில்  தாக்கப்படுவது போன்ற பொய் பரப்பப்பட்டதை கூர்ந்து கவனித்தால் அதிலுள்ள சூழ்ச்சி புரியும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..  

 வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே? என்கிற கேள்விக்கு உள்களில் ஒருவன் பதில்கள் தொடரில்,  முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்!

கூர்ந்து கவனித்தால்,  இதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.. - முதல்வர் ஸ்டாலின்..

பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார்.

பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' – 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.” என்றார்.