முதல்வர் விஜய் அழைத்தால் நேரில் சந்திப்பேன்..! - விடுதலையானதும் சவுக்கு சங்கர் பேட்டி..!
தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் யூடியூபர் சவுக்கு சங்கர். அவரின் தொடர் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சவுக்கு சங்கர் மீது கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
2 முறை அவர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ச்சப்பட்டது. இரண்டு முறையும், அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.முதல் முறை குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட பிறகு, அடுத்த மூன்றாம் நாளே மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
வழக்குகளில் ஜாமின் பெற்ற சங்கர், தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.இதனால் அவர் மீதும், அவரது சவுக்கு மீடியா அலுவலக ஊழியர்கள் மீதும் வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டன. கடந்தாண்டு ஆதம்பாக்கம் மற்றும் சைதை போலீசார் 2 மோசடி வழக்குகளை பதிந்து பின்னர் கைது செய்தனர். அவற்றில் நிபந்தனை ஜாமின் பெற்ற சங்கர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, ஆந்திரா சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தேர்தலுக்கு சில நாள் முன்பாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவரது வழக்குகளில் ஜாமின் கிடைத்தது.
அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து தமிழக அரசு சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.இதையடுத்து புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலையை அறிந்து ஆதரவாளர்களும், நண்பர்களும் சிறை வாசலில் காத்திருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; யாரை வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் விஜய் சந்திக்க அழைப்பு விடுத்தால் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். திமுக போல ஒரு கொடூர மனது கொண்ட இனி எந்த காலத்திலும் இருக்க முடியாது. தமிழகத்தில் இதற்கு முன்பு எவ்வளவோ முதல்வர்கள் ஆண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் குறைவாக திட்டுமாறு ஊடகங்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் எதிர்த்து பேசும் ஊடங்களையும், ஊடகத்தில் பணியாற்றுபவர்களையும் சிறையில் தள்ளும் கொடுங்கோல் அரசாங்கம் திமுகவை தவிர வேறு எந்த அரசும் கிடையாது.ஊடகங்களில் வரும் சின்ன, சின்ன விமர்சனங்களையும் முதல்வர் விஜய் கவனத்தில் கொண்டு சில திருத்தங்களை செய்திருக்கிறார் என்பதை அவரது செயல்பாடுகளில் இருந்து நான் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் ஜனநாயகம் மேலும் இருக்கும். விஜய்க்கு தெரியாமல் போலீசார் ஏதேனும் நெருக்கடிகளில் ஈடுபட்டால்கூட அமைச்சரவையில் இடம்பெற்று உள்ள கூட்டணிக்கட்சிகளே விஜயிடம் சுட்டிக்காட்டும் என்பதால் தமிழகத்தில் ஊடக சுதந்திரம் வலுவாக இருக்கும்.

