இப்படி நடக்கும் என நினைச்சு கூட பார்க்கல... மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்; கடைசியில் நடந்தது...

 
1

பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயியான மங்கிலால் மேக்வால், கடந்தாண்டு ரூ.5 லட்சத்திற்கு தனது நிலத்தை விற்றார். அந்தப் பணத்தை வைத்து விவசாயி நிலத்தில் ஒரு அறை கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், மனைவிக்கு தெரியாமல், பணத்தை பாலிதின் கவரில் போட்டு குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார். 

மங்கிலாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்து விட்டார். திடீரென அறை கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக தேடிப் பார்த்து வந்துள்ளார். அப்படி அவர் சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. நாளடைவில் இந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பிறகு மங்கிலாலுடன் சேர்ந்து பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்படியே ஓராண்டை கடந்து விட்ட நிலையில், மழை பெய்ததால் நிலத்தை விவசாயத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, டிராக்டரை வைத்து உழுதுள்ளனர். அப்போது, புதைத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளது. 

அதில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கறையான் அரித்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகினர். இதையடுத்து, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கியில் மாற்றுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மறுத்த வங்கி நிர்வாகம், ஜெய்ப்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தப் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில், அவரது குடும்பம் தவித்து வருகிறது. இதனிடையே, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.