நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க.. - தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நம்பிக்கை கொடுத்த ரஜினிகாந்த்..

உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி. ஏ. துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரை தொலைபேசியில் நம்பிக்கை தெரிவித்த அவர், படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் வி. ஏ. துரை. இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார். இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவ செலவுக்கு பணமின்றியும், பார்த்துக்கொள்ள யாருமின்றி தவிப்பதாகவும், உதவி கோரியும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். மேலும் அதில், ரஜினி தன்னுடைய 40 வருட நண்பர் என்றும், தன்னுடைய நிலைமையை அவரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கமும் திரைத்துறையினரும் உதவ முன் வர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, நடிகர் கருணாஸ் ரூ. 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிதாமகன் படத்தில் நடிக்க நடிகர் கருணாஸ்க்கு அப்போது தயாரிப்பாளர் துரை ரூ. 50, 000 கொடுத்திருக்கிறார். அந்த தொகையை துரையின் அவரது மருத்துவ செலவுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார் கருணாஸ். அதேபோல் நடிகர் சூர்யாவும் ரூ. 2 லட்சம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி. ஏ. துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.
தயாரிப்பாளர் வி. ஏ. துரையை செல்போனில் தொடர்பு கொண்டு நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்படாதீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ரஜினிகாந்த் , படப்பிடிப்பு முடிந்ததும் வி. ஏ. துரையை நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.