அம்மாவின் உண்மையான வாரிசு நான்தான்.. என்னிடம் ஆதாரம் இருக்கு! - ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி!
அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர். அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் முதல் நேர்காணலும் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமும் நேற்று முன் தினம் நேர்காணல் நடந்தது.
நேற்று காலை முதல் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் மற்றும் மாலை திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிகொண்டு ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வரும் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா, நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த நிலையில் அதிமுகவினரால் துரத்தப்பட்டார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அவரை அங்கிருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொள்ளும் அம்ருதா என்னும் ஜெயலட்சுமி தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தேன். நான் என்ன முதல்-அமைச்சர் பதவி கேட்டா அ.தி.மு.க. அலுவலகம் போனேன். எதற்காக எனக்கு விருப்பமனு கொடுத்தாங்க எதற்காக நேர்காணலுக்கு வரசொல்லிட்டு துரத்தி விட்டாங்க அம்மாவின் வாரிசு நான் தான், அதற்கான உயில் தேனியை சேர்ந்த ஒருவரிடம் இருக்கு. அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்றார்.


