புதிய அரசின் திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் தேடுகிறேன்.. தேடுகிறேன்.. தேடிக் கொண்டே இருக்கிறேன் - சட்டமன்றத்தில் ஓபிஎஸ் உரை..!

 
1

இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியவுடன் முதலில், பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தவெக அரசு மிகவும் வித்தியாசமாக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்வதை மட்டும்தான் சொல்வோம் என்று ஆணித்தரமாக அளித்த வாக்குறுதிகளைத் தாங்களும் மறந்து, மக்களும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, தனது முதற்கட்ட அறிக்கையையும், வேளாண் அறிக்கையையும் இந்த அரசு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த, ஓபிஎஸ், பேர் மாற்று பட்டியல் போல நிதிநிலை அறிக்கை வெளியாகி இருப்பதாக விமர்சித்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு முதலமைச்சர் துறைவாரியாக ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். ஆனால் இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையோ ஏமாற்றத்தின் வடிவமாக இருப்பதாக தெரிவித்தார்.

புதிய அரசு அமைந்திருக்கிறது, புதிய திட்டங்கள் வருமே என்று நம்பிய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில் சொன்னபடி உரிமைத் தொகையை வழங்கவில்லை. ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று நம்பிய மகளிருக்கு, அது குறித்த அறிவிப்புகூட வரவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் நிற்கிறார்கள் என்றார்.

"பெயர் மாற்ற பட்டியல் போல் பட்ஜெட். வாக்குறுதிகளை அள்ளி தெளித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. பட்ஜெட் ஏமாற்றத்தின் வடிவமாக உள்ளது. திருப்பும் பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே தொடர்கின்றன" என சட்டப்பேரவையில் ஓ. பன்னீர் செல்வம் பேசியுள்ளார். 

தமிழக பட்ஜெட் திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் தேடுகிறேன்..  தேடுகிறேன்.. தேடிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை. 

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சிகள் சொல்வதுபோல் மூன்றே மாதத்தில் திட்டங்களை நிறைவேற்றுவதில் சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் அப்படி சரித்திரம் படைத்திருந்தால் சொல்லுங்கள் என பதில் அளித்துள்ளார்.