சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் : தருமபுரம் ஆதினம்..!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனையை 1943 ம் ஆண்டு தருமபுரம் ஆதினத்தின் 24வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பராமாச்சாரியார் சுவாமிகள் அவரது தாயார் நினைவாக ஆதினத்துக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார். எட்டு ஆண்டுகள் கட்டுமான பணி நிவறவடைந்து 1951ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் குமாரசாமி ராஜா மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் தருமபுரம் ஆதினம் ஒப்படைத்தது.
ஆனால், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னார் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார். இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தருமபுரம் ஆதினம் சார்பில் இன்று பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப் போவதாக முன்பு தகவல் வந்தது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பெற்றது. மீண்டும் நாளை பூமி பூஜை போடுவதாக அறிந்தோம். வெளியூர் நிகழ்வில் இருக்கிறேன் இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


