கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவி! விரக்தியில் கணவன் தற்கொலை
சென்னை மணலியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவனின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணலி புதுநகர் ஆண்டார்குப்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு வருடம் முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் என்பவரை அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்திருந்த நிலையில், முத்துக்குமார் மனைவி குணசுந்தரிக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக சென்ற குணசுந்தரி வீட்டிற்கு திரும்ப வரவில்லை. சதீஷ்குமார் உடன் குணசுந்தரி வீட்டை விட்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும் கடிதம் எழுதி வைத்தும் எனது மரணத்திற்கு காரணம், சதீஷ்குமார் என்று எழுதி வைத்து இறந்துள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால், பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட முத்துக்குமாரின் உடலை வழியினிலே மடக்கி ஆம்புலன்ஸ் வாகனத்துடனே வைத்து பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

